Friday, January 6, 2012

valarum Ariviyal Tamil

குறளறிவியல்- வான் சிறப்பு

பிறந்தது முதல் இறக்கும் வரை வாழும் வாழ்க்கை முழுமைக்கும் தேவையான அறநெறிகளை மென்மையான
அறிவுரைகளாக்கிக் கூறுவது திருக்குறள். இதில் வரும் கருத்துகள் யாவும் இயற்கையின் சாயலில்
சொல்லப்பட்டிருப்பதால் இயற்கையைப்போல  அவை என்றும் மாறாத் தன்மை கொண்டு விளங்குகின்றன .
எல்லோருக்கும், எக்காலத்திற்கும் ஏற்புடைய கருத்துகளாக இருப்பதோடன்றி, அறிவியல் வாசனையையும்
ஆங்காங்கே கொண்டிருப்பது இதற் சிறப்பாகும் .குறளில் அறிவியல் என்பது தமிழுணர்வு மிக்கோரால்
வலிந்து கற்பிக்கப்படும் ஒரு போக்கு என்று கூருவாருளர் .ஆனால் உண்மைநிலை அப்படியில்லை .
வள்ளுவரைப்போல இயற்கையை நேசிக்கும் ஒருவரின் சிந்தனையில் அறிவியல் தொடர்புடைய கருத்துகள்
வெகு இயல்பாக வெளிப்பட்டுத் தோன்றுவதும் ,அவர்தம் படைப்புகளில் இடம்பெறுவதும் இயற்கையே .

கலையானாலும் ,அறிவியலானாலும் அவைகளுக்கு மூலமாக இருப்பது இயற்கையே .கலை என்பது
இயற்கையை விவரிக்கும் கற்பனைகளின் ஒரு மகிழ்ச்சித்  தோற்றம் .அறிவியல் என்பது இயற்கையை
ஒரு சட்டத்திற்குள் விளக்கும் முயற்சிகளின் தொகுப்பு. .களையும் ,அறிவியலும் ஒரே இயற்கையின்
ஒரு வேறு வடிவங்களே. வேறு பட்டுத் தோன்றும் இவையிரண்டும் உயரெல்லைகளில் ஒன்றிணைந்து
விடுகின்றன. அப்போது கலைக்குள் அறிவியலையும், அறிவியலுக்குள் கலையையும் காண முடிகிறது.
இக் கண்ணோட்டத்தில் திருக்குறள், அறிவியல் பொதிந்த ஒரு கலைப்படைப்பாகத் தோன்றுகிறது.
குறட்பாக்களில் அறிவியல் கருத்துகள் செறிந்திருப்பதைக் குறள் மற்றும் அறிவியலில் ஒரு சேர
ஈடுபாடுடையவர்களால் மட்டுமே எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
கடவுள் வாழ்த்து மூலம் இயற்கையே இறைவன், இறைவனே இயற்கை என்ற மூல மந்திரத்தைக் கூறி ,எல்லையில்லாது எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் இயற்கையை ஒரு பத்துக் குறள்பாக்களுக்குள்
அடக்கியுள்ளார் திருவள்ளுவர். இயற்கையின் தன்மைகள் யாவும் இறைவனின் குணங்களாக அதில்
சொல்லப்பட்டிருப்பதைப் பார்த்தாலே இது விளங்கும் .
எங்கும் நிகழும் இயற்கையின் பிழையற்ற ,பிசகற்ற, திட்டவட்டமான் செயல்கள் அதன் மெய்யறிவையும் ,
மென்தன்மையையும் ,அறவழியையும் சுட்டிக்காட்டுகின்றன .வற்றாத செல்வத்தைத் தன்னகத்தே கொண்டிருந்தாலும் ,அவற்றையெல்லாம் தனக்கென
வைத்துக் கொள்ளாது விருப்பு வெறுப்பின்றி எல்லோர்ருக்கும் பகிர்ந்து கொடுப்பாதால்
பகவனாகும் இயற்கையும் ,தன ஐம்பொறிகளான நீர், நெருப்பு, நிலம் ,காற்று, வெளியை கட்டுப்படுத்தி எல்லையில்லாது விரிந்திருக்கும் இப்பேரண்டத்தையே ஆளுகிறது .அறவாழி அந்தணர்களைப்
போன்று இயற்கையும் ஒத்த சிந்தனைகளைக் கொண்டது. இயற்கைக்கு இணை இயற்கையே
என்பதால் அதற்கு இணையாக வேறொன்றை எவராலும் சுட்டிக் காட்ட முடியாது .
கடவுள் வாழ்த்தை அடுத்து வரும் வான் சிறப்பு, இயற்கை  வடிவிலான இறைவனை படம் பிடித்துக்
காட்டுகிறது. இதில் வரும் பத்துக் குறள்களும் மழை சார்ந்த அறிவியலை சமுதாய வாழ்க்கையோடு
இணைத்துக் கூறுகின்றன. ஒருவர் ஒரு கருத்தைக் கூறும் போது அதற்கு ஆதாரமாக் ஒரு பின்னணி
இருக்கவேண்டும். இது அவர் கூறும் கருத்துகளில் வெளிப்பட்டுத் தெரிவதில்லை..குறளறிவியலும்
அப்படிப் பட்டதே .குறளறிவியல்  நோக்கில் இனி திருக்குறளின் இவ்வதிகாரத்தைப் புரட்டுவோம் .

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று .

அதிகாரத்தின் முதல் குறளில் பெய்யும் மழை நீரை அமிழ்தம் எனக் குறிப்பிட்டுள்ளார் .இன்றைக்குக்
கிடைக்கும் நீர் வளங்களுள் மழை நீரே, தூய நீராக உள்ளதால் அதையே அமிழ்தம் எனக் கூறியுள்ளது
மிகப் பொருத்தமானது. அமிழ்தம் என்பது சுவை நீரன்று ,அது உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒரு
நீர்மப் பொருள் ;சாவாமைக்கு உற்ற மருந் து; அது  உண்மையில் சாதாரண நீர்தான். தேவர்கள் கடலைக்
கடைந்து அமிழ்தம் பெற்றதாக புராணக் கதைகள் கூறுகின்றன. இங்கே அமிழ்தம் என்பது குடிநீரைத்தான்
குறிப்பதாகக் கொள்ளவேண்டும் .இந்தப் புராணம் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு உண்மைச்
சம்பவமாகி இருக்கிறது. .உப்புக் கரிக்கும் கடல் நீரிலிருந்து ,தூய குடிநீரைப் பெற இன்றைக்கு
ஆட்சியாளர்கள் கடலைத்தான் கடைந்து கொண்டிருக்கின்றார்கள் .

ஒவ்வொரு குறள் மூலமும் ஓர் இனிய செய்தியை மக்களுக்கு உணர்த்திக் காட்டுவதே வள்ளுவரின்
தலையாய நோக்கம்.இக் குறளிலும் அது மறைபொருளாக உட் பொதிந்திருக்கிறது .நீர் ,சத்துக்களைக்
கொண்ட உணவுப் பொருளில்லை என்றாலும் ,சத்துக்களைப் பெற அதுவே ஊடகப் பொருளாக
விளங்குகிறது. அதனால் நீரின்றி உலகில் உயிர் வாழ்க்கை ஏதுமில்லை எனலாம். மனிதர்கள்
உணவின்றி சில வாரங்கள் கூட உயிர் வாழ்ந்துவிடலாம் ,ஆனால் நீரின்றி ஒரு சில நாட்களுக்கு
மேல் உயிர் வாழ முடியாது. என்று சொல்வதிலிருந்து நீரின் முக்கியத்தை உணரலாம் .இக் குறள்
மூலம் வள்ளுவர் சொல்லவரும் செய்தி என்னவென்றால் ,அமிழ்தம் போன்ற மழைநீரின்
ஒவ்வொரு துளியையும் வீணாக விரயமாக்கி விடாது ,பயனுறு திறன் மிக்க முறையில் பயன்படுத்தி
வளம் பெறவேண்டும்  என்பதாகும். இங்கு வரும் உலகம் என்பது உலகத்தில் வாழும் மனிதர்களை
மட்டுமின்றி எல்லா வகையான உயிரினங்களையும் குறிப்பிடுகின்றது .நீரோடு தொடர்பற்ற
உயிரினங்கள் எதொன்றுமில்லை என்பதை முழுமையாகப் புரிந்தவர்களே ,உயிரினகளின்  வாழ்க்கைக்கு
மழைநீர் அவசியமானது என்ற பொதுவான கருத்தைக் கூறமுடியும்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

உலகில் வாழப் புகும் மக்களுக்கு உண்ண உணவும், குடிக்க நீரும் கிடைக்க இயற்கை  தரும் உறுதிமொழி
இந்த மாமழையேயாகும் . உணவுப் பொருட்களின் விளைச்சலுக்கு நீர் இன்றியமையாதது .
நீர் ஒரு பொதுவான கரைப்பானாக இருப்பதால் இதில்  பெரும்பாலான தாது உப்புக்கள் கரைகின்றன .
அதனால் எல்லா உயிரினங்களும் நீரையே ஊடகமாகக் கொண்டு வாழ்கின்றன.
வேர் மூலம் இச் சத்துக்களை தாவரங்கள் உறிஞ்சி இலைப் பகுதிக்கு எடுத்துச் செல்கின்றன .
இலைத் துளைகள் மூலம் காற்றிலுள்ள கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி ,ஒளிச் சேர்க்கை
மூல அவற்றை ஒன்றிணைத்து சக்கரைப் பொருளை உற்பத்தி செய்கிறது . இதுவே பிற்ப்பாடு
விளைபொருளாக மாறுகிறது. இதிலிருந்து உணவுப் பொருட்களுக்கு முக்கியமான மூலப்
பொருள் மழை நீர் என்பது தெளிவாகும் .
இக் குறளில் வள்ளுவர் நீரையும் ஓர் உணவுப் பொருளாகக் குறிப்பிட்டுள்ளார் .பொதுவாகத்
தூய நீரில் எவ்விதச் சத்தும் இல்லையென்றாலும் ,அது உணவுப் பொருட்களின் செறிமானத்திற்கும்,
உடலால் சத்துக்கள் உட்கிரகிக்கப் படுவதற்கும் நீரே உறுதுணையாக இருப்பதால் .நீரையும் இங்கு
உணவுக்குச் சமமாகக் குறிப்பிட்டுள்ளார் எனலாம் .தாது உப்புக்கள் கரைக்கப் பட்ட நீரில் ,
உலோகச் சத்துக்களும் ,வைட்டமின் போன்ற உயிர் சத்துக்களும் உள்ளன. வறுமையில் வாடுவோர்
தம் பசியைப் போக்கிக் கொள்ள நீரையே உணவாகக் கொள்வர்  
விண் இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி

மழை பெய்யாமல் பொய் படுமானால் ,கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக் இருந்தும், பசியால் உயிர்கள்
வாடும் என்பது இதன் உட்பொருள் .இக் குறள் மூலம் உப்புக் கரிக்கும் கடல் நீர் விளைச்சலுக்குப்
பயன் படாது என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். மழை பொய்ப்பின் பசியால் உயிரினங்கள் ஏன்
வாடுகின்றன என்பதற்கான காரணத்தை அடுத்த குறளில் விளக்கியுள்ளார். மழை வளம் குன்றிப்
 போனால் உழவர்களுக்கு வேலையில்லை .அதனால் பயிர் விளைச்சலும் இல்லை. உணவுப்
பொருட்களின் உற்பத்தி தடைப்படுமானால் பசியால் உலகம் வருந்தும்.
கெடுப்பதூஉங்  கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்ப தூஉங்  எல்லாம் மழை

காலந் தவறாது மழை பெய்யாவிட்டால் மக்களின் சமுதாய வாழ்க்கை சீர் கேட்டுப் போகும்
என்பதைச் சுட்டிக் காட்டுவது இக் குறள் .மக்கள்  ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையை
நிலைப் படுத்திக் கொள்வதற்கு ஏதாவதொரு வேலை இருக்கவேண்டும் .வேலையற்றோர்
மட்டுமே நேரத்தை வெறும் எண்ணங்களை மேய்க்கச செலவிட்டு   இல்லாத கற்பனை உலகில்
உயிரில்லாப் பொருளாய் இருந்து கொண்டிருக்கின்றார்கள் .தீய எண்ணங்கள் எளிதில் மனதில்
பற்றிக் கொள்ள இது வாய்ப்பாக அமைகிறது. முன்னேறு வதற்க்குச் சுருக்கு வழியாகத்
தோன்றும் தீய வழிகள் தரும் மயக்கம் மக்களிடையே பரவும் போது சமுதாயமே அறவழி
மீறும் இழி நிலைக்குத்ச் தள்ளப் படுகிறது .மழை இல்லாது போனால் பலருக்கும்
வேலை இல்லாதுபோகும் .அது தனி மனிதனைக் கெடுத்து இறுதியில் சமுதாயத்தையே
கெடுக்கும். இக் கருத்தைப் பின்தொடரும் ஒரு கருத்து முன்னதிற்கு  முற்றும் எதிர்ப்போக்கானது .
தீய எண்ணங்களால் கெட்டுப் போனவர்கள் ,நல்ல சிந்தனை உள்ளவர்களாக நிலை மாற
உறுதுணை புரியும் இந்த மாமழை சமுதாயத்தைக் கட்டிக் காக்க வல்லது .மழை இல்லாவிட்டால்
நல்லோரும் தீயோராக மாறுவர்  என்றும் ,தவறாது மழை பெய்யின் ,தீயோரும் நல்லோராக
மாறுவர் என்றும் ஒன்றுக் கொன்று எதிர்ப்போக்கான கருத்தைத் திருவள்ளுவர் தெரிவித்துள்ளார்.
 மழையில்லா விட்டால் நிலத்தில் புல் கூட முளைக்காது என்று மழையின் சிறப்பைக்
கோர்ரிய வள்ளுவர், மழையின் அறிவியலை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். .

நெடுங் கடலும் தன் நீர்மை குன்றும் தடித்தெழிலி
தான் நல்கா தாகி விடின்
மேகம் உருவாவதற்கு கடல் நீர் ஆவியாதலே காரணம் என்றும், மழை பொழிவதற்கு
மேகம் திரள்வதே காரணம் என்றும் கூறுவது இக் குறள். கடல் வளம் குன்றி அதன் புறப்பரப்பு
சுருங்குமானால், ஆவியாதலும் குறைந்து மழையும் குறையும். மழை குறையுமானால்
கடலும் தன் வளத்தை இழக்கும். கடல் வளம் என்பது அதிலுள்ள உப்புக்கள், ,உயிரினங்கள் ,
கனிமங்கள் போன்றவைகளாகும். நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு பயனளித்த தூய மழை
நீர், வடிந்து இறுதியில் கடலையே சென்றடைகின்றது .அப்போது நிலத்தில் உள்ள உப்புக்களையும், உலோகங்களையும் அரித்தெடுத்து கடலில் கொண்டு சேர்க்கிறது .அதனால் கடல் வளம் சிறிதும்
குறையாமல் நிலப்படுத்துகின்றது  என்ற கருத்தை இக்குறள் பறை சாற்றுகிறது .
மழை பெய்யத் தவறி விட்டால் ,மக்கள் மகிழ்ச்சியையும் பிறர் பொருட்டுச் செய்யும் தானத்தையும்
தம் பொருட்டுச் செய்யும் தவத்தையும் விட்டுவிட்டு மனித இயல்பை இழப்பார்கள் .திருவிழாக்கள்
கொண்டாடுவதை மறந்து ,கடவுளைத் தொழ மறுப்பார்கள் .இதன் மூலம் மக்கள் மனித நேயத்தை த்
தொலைத்து விட்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மடிவார்கள் என்ற கருத்தை வள்ளுவர்
கூறுகின்றார்.
நீரின்று அமையாது உலகெனின் யார் யார்க்கும்
வானின்று  அமையாது ஒழுக்கு .
'நீரின்றி அமையாது உலகு ' என்ற சொற்றொடர் ,உயிரின் பரிணாம வளர்ச்சிப் படியின் முதல்
கட்டத்தைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. முதன் முதலில் உயிரினங்கள் நீர் ஊடகத்திலே
உருவாயின .இயங்கிச் செல்வதற்கு ஏதுவாக உடலில் உறுப்புகள் ஏதும் இல்லாததால் ,
நீரில் மிதவலாக் வாழ்வதற்கு இது அனுகூலமாக இருந்தது. அப்படி உருவாகாது போயிருந்தால் ,
பரிணாம வளர்ச்சியின் அடுத்தடுத்த கட்டங்கள் நிகழாது போயிருக்கும் .அதனால் உயர்
உயிரினங்களால் நிறைந்த, உயிரியல் சமநிலை பெற்ற உலகு உதிக்காது போயிருக்கும் .

மழை இல்லது போனால் ஒழுக்கம் கேட்டுப் போகும் என்பதை அவ்வதிகாரத்தில் வரும் சில
குறள்களில் சுட்டிக் காட்டிய வள்ளுவர், இக் குறளில் இப் பாதிப்பு எவரையும் விட்டுவைப்பதில்லை
இன்று தெரிவித்துள்ளார். துறவிகள் கூட விதி விலக்கல்ல என்பது இவர் முடிவு.

தனக்கும் தேவையான ,வேண்டிய ஒன்று தனுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கும் வரையில்
தான் ஒழுக்கம் நிலைப்படுகிறது. இந்த நம்பிக்கை பொய்த்துப் போய்விடும் என்ற நம்பிக்கை
ஊடறுக்கும் போது ,சூரிய ஒளி பட்ட பனித் துளி போல இருக்குமிடம் தெரியாமல் ஒழுக்கம்
ஒழிந்து போய்விடுகிறது .ஒழுக்கத்தின் மறைவு எப்போதும் ஒழுக்க மின்மையையே
பிறப்பிக்கிறது.புனைந்து சொல்லப்படும் ஒரு கதை இந்த உறை பொருளை உறுதி
செய்கிறது.
ஒரு சமயம் பல துறைவிகள் ஒன்று சேர்ந்து ஆன்மிகப் பயணம் மேற்கொண்டனர்.
அவர்களுடைய வழியில் கடிய நிலங்களும் ,  கொடிய மிருகங்கள் வாழும் காடுகளும் ,
செங்குத்தான மலைகளும் குறுக்கிட்டன .கல்லும் முள்ளும் குத்தினாலும் வருத்தம்
கொள்ளாது பயணத்தைத் தொடர்ந்தனர். வறட்சி காரணமாக வழியில் நீர் தட்டுப்பாடு
இருந்ததால் அவர்களுக்குத் தொடர்ந்து சில நாட்களுக்குத் தண்ணீர் கிடைக்காது போனது.
தண்ணீருக்காக அவர்கள் நெடுந் தொலைவு  கடக்க வேண்டி வந்தது .இனிமேல் ஓரடி
கூட எடுத்து வைக்க முடியாத அளவிற்கு எல்லோரும் களைத்துப் போயிருந்தார்கள் .
அப்போது அருகே கிடந்த ஒரு சிறிய  குவளையில் சிறிதளவு தண்ணீர் இருப்பதைக்
கண்டனர். அது வரை ஒருவர் பின் ஒருவராகச் சென்றவர்கள், தண்ணீரைக் கண்டவுடன்
பாய்ந்து முந்திச் செல்ல முயன்றனர். .எல்லோரும் ஒரே காலத்தில் குவளையைக்
கைப் பற்றியதால், குவளை உடைந்து கிடைத்த கொஞ்ச நீரும் சிந்திப் போனது. கண
நேரத்தில் ஒழுக்கம் மறைந்து ஒழுக்கமின்மை பிரகாசமாய் வெளிப்பட்டது.
மழை பெய்யாது எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்காவிட்டால் ஒழுக்கமின்மை
செழித்தோங்கும் என்ற வள்ளுவன் கூற்று இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.


  

No comments:

Post a Comment